பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாதிகள் ஊடுறுவல், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அலுவலர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, நாகை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை குறிவைத்து அவ்வப்போது சோதனை நடக்கிறது.
இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் கோவை உக்கடம், வின்சென்ட் சாலை, ஜிஎம் நகர், பிலால் எஸ்டேட் உள்ளிட்டப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர காவல்துறை உதவியுடன் ஜிஎம் நகரை சேர்ந்த உமர் பரூக், வின்சென்ட் சாலை சனோபர் அலி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சமீஷா முபீன், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது யாசிர், ஜிஎம் நகர் பகுதியில் உள்ள சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வந்தது.
தற்போது தேசிய பாதுகாப்பு முகமையினர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.