கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது செந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த சில நாள்களாக வடமாநிலத்தவர்கள், அவர்களது சொந்த மாநிலத்திற்குச் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கோவையில் தங்கி இருந்த மேகாலயாவைச் சேர்ந்த 42 பேர், தங்களது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் செல்ல ஆன்லைனில் பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மூன்று தனியார் வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து இன்று சிறப்பு ரயில்கள் மூலம் மேகாலயாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான முழுச் செலவும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய மேகாலயாவைச் சேர்ந்த பலவிஷா, 'நாங்கள் மேகாலயாவிற்குச் செல்ல மேகாலயா அரசிடம் இருந்து ஒரு விண்ணப்பம், தமிழ்நாடு அரசிடம் இருந்து ஒரு விண்ணப்பம் சேர்த்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தபின் மாவட்ட நிர்வாகம் மூலம் நாங்கள் மேகாலயா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் எங்களைச் சிறப்பாக பார்த்துக் கொண்டது. தற்போது நாங்கள் அங்கு செல்வதற்கும் உதவிகளை செய்துள்ளது. 50 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறினார்.
இதையும் படிங்க: சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாய் அழைத்து வரப்படும் வடமாநிலத்தவர்கள்