கடந்த மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தின விழா பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டம் வால்பாறை நேசக்கரங்கள் மற்றும் எழுச்சி மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவை அரசுக்கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிதரன், வழக்கறிஞர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர், பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக திகழ்கிறார்கள் என்றார்.
முன்னதாக மகளிர் இயக்க அமைப்பாளர் நேசமணி பால்நிலா வரவேற்றுப் பேசினார். அப்போது அவர், இந்த அமைப்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் வால்பாறை நகரில் உள்ள அனைத்து தேயிலை தோட்ட பெண்மணிகள் நேசக்கரங்கள் அமைப்புகளில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றார். இறுதியாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்துநன்றி கூறினார்.