கோவை: எஃப்.எம்.எஸ்.சி.ஐ (FMSCI) மற்றும் ஜேகே டயர் இணைந்து நடத்திய 25ஆவது தேசிய அளவிலான பார்முலா-4 கார் பந்தயம், கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்றது. இப்போட்டிகள் கடந்த 17ஆம் தேதி தொடங்கின. முதல் சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்போட்டிகள் நேற்று (டிச.18) நடத்தப்பட்டன.
இதில் எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயங்களும், ஜேகே டயர் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் கோப்பைக்கான மோட்டார் சைக்கிள் பந்தயமும் நடத்தப்பட்டது.
மைதானத்தில் அனல் பறக்கும் விதமாக விறுவிறுப்பாக நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் அஸ்வின் தத்தா என்பவர் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் துருவ் கோஸ்வாமி என்பவர் முதலிடத்தையும், கைல் குமரன் இரண்டாவது இடத்தையும், அர்ஜுன் சியாம் நாயர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற ஜே.கே. டயர் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் மோட்டார் சைக்கிள் போட்டியில் சுதீர் சுதாகர் என்பவர் முதலிடத்தையும், அனீஷ் ஷெட்டி இரண்டாவது இடத்தையும், ஆல்வின் சேவியர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பார்முலா 1 கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.