கோவை ரோட்டரி டவுன் சங்கம் சார்பில் மியாவாக்கி (அடர் வனம்) முறையில், மதுக்கரை பஞ்சாயத்து உள்பட இயற்கை உரம் தயாரிக்கும் பகுதிகளில் இரண்டரை ஏக்கர் அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இன்று (செப்.18) முதற்கட்டமாக வேப்பமரம், அரச மரம், ஆலமரம், கொய்யா, சப்போட்டா மரம், மாமரம் உள்ளிட்ட 15 வகையான 4,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இது குறித்து ரோட்டரி சங்கத்தினர் கூறுகையில், "மதுக்கரையில் இயங்கும் சிமெண்ட் ஆலையினால் அப்பகுதியில் அதிக மாசு வெளியேறுகிறது என்று குற்றச்சாட்டுகள் வருவதால் அப்பகுதியில் இத்திட்டம் முதலில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பெறப்படும் மக்கும் குப்பைகளை இந்த மரக்கன்றுகளுக்கு உரமாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.
இதனால் அப்பகுதியில் பறவைகள் அதிக அளவில் வரவாய்ப்புள்ளதால் பறவைகளுக்கான உயிர் சூழல் அங்கு அமைக்கப்படும். அது மட்டுமின்றி இடிகரை பஞ்சாயத்துடன் இணைந்து 4.5 ஏக்கர் நிலத்தில் 15,000 மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.