கோவையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இது தொடர்பாக மாநில காவல்துறை அதிகாரிகளும், மாநகர காவல் துறையினரும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு தற்போது என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வரும் சூழலில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் "மதம்" vs மதம் என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் "வெடிக்கச் செய்வது வீரம் அல்ல.. வெடிப்பு மூலம் வெறுப்பைத் தான் பெற முடியும்.. படிப்பு மூலம் பகுத்தறிவை தேடு.." "மதம் பிடித்த யானைக்கு தேவை தனிமை.. மதம் பிடித்த மனிதனுக்கு தேவை கூட்டம்.." உள்ளிட்ட சிந்தனைகளை விதைக்கும் வகையில் கவிதையை எழுதியுள்ளார்.

மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள இந்த கவிதை பல்வேறு தரப்பினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. வீதி தோறும் நூலகம், ஆட்டோ நூலகம் என வாசிப்பு தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை அவர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் கொடி: விமான வடிவ பலூன் கண்டெடுப்பு