கோவை விமான நிலையத்தில், சுங்கவரித் துறை அலுவலர்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கார்ட் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானப் பயணிகளை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில், சந்தேகத்துக்கிடமாக இருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அபீஸ் என்ற இளைஞரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் உரிய ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
அதேபோல், மற்றொரு பயணியான பிரீதின் ஏண்டோ என்ற இளைஞரிடம் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளையும் சுங்கவரித் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரிடமும் சுங்கவரித் துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கார்ப்பரேட் வரி குறைப்பால் பலனடைந்த பிரபல சிகரெட் நிறுவனம்!