கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் கே.அர்ஜூனன், அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், விபி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அப்புகார் மனுவில், 'கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் அலுவலர்கள் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுக வேட்பாளர்களை பல்வேறு காரணங்களைக் கூறி, வேண்டும் என்றே அலைக்கழித்து வருகிறார்கள்.
காவல்துறையினர் அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 'கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் தேவையற்ற காரணங்களைக் கூறி அதிமுக வேட்பாளர்களை வேண்டும் என்றே அலைக்கழித்து வருகிறார்கள்.
காவல் துறையினரும் அதிமுக வேட்பாளர்கள் உடன் வாக்கு சேகரிப்பவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
காவல்துறையினர் திமுக கட்சியாகவே மாறி உள்ளனர். அதிமுக வேட்பாளர்களை நிராகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் அலுவலர்களும், காவல் துறையினரும் இத்தகையப் போக்கை கைவிட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தலைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். கோயம்புத்தூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அலுவலர்கள் வேலை செய்வதில்லை. தேர்தலின் பொழுது என்னையும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது. யாரை மிரட்டியும் யாரும் வெற்றி பெற முடியாது' எனத் தெரிவித்தார்.