கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருபவர் கந்தசாமி. இவரிடம் கார்த்திக் என்பவர் காசாளராகப் பணிபுரிந்து வந்தார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக காசாளராக கார்த்திக் பணிபுரிந்து வருவதால், நிறுவனத்தின் அனைத்து கணக்கு வழக்குகளையும் கந்தசாமி நம்பிக்கையுடன் அவரிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்நிலையில் கந்தசாமி சமீபத்தில் ஜவுளி நிறுவனத்தின் கணக்குகளை சரி பார்த்த போது , ஜவுளி நிறுவனத்திற்கு வரவேண்டிய ரூ.1.25 கோடி மதிப்புள்ள 4,35,200 மீட்டர் காடாத் துணிகள் வராமல் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்தபோது, ஜவுளி நிறுவனத்திற்குக் கடத்திகள் ஏற்றிவரும் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உலகசாமி துரையுடன் சேர்ந்து, காசாளர் கார்த்திக் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஜவுளி நிறுவனத்தில் இறக்குமதி செய்ய வேண்டிய காடாத் துணிகளை வேறு பகுதிக்குக் கொண்டு சென்று, விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், காசாளர் கார்த்திக் மோசடியாக பெறப்பட்ட பணத்தை, தனது தந்தை முருகேசனின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.
இந்த மோசடிக்கு அவரது மனைவி மலர் கொடியும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இந்த மோசடி குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவில் ஜவுளி நிறுவன உரிமையாளர் கந்தசாமி புகாரளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கார்த்திக், அவரது மனைவி மலர்கொடி, தந்தை முருகேசன் மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உலகசாமி துரை ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உலக சாமி துரையை குற்றப்பிரிவு காவல்துறையினர், காரணம்பேட்டை அருகில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகை பட்டறை ஊழியரை மிரட்டி நகைகளை பறித்த இருவர் கைது!