கோயம்புத்தூர்: ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பழமை வாய்ந்த நந்தகோபால் சாமிமலை கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடிவாரத்திலிருந்து மழை உச்சி வரை ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டதாகும்.
இங்கு செல்வதற்கு கரடு முரடான பாதைகளில் நடை பாதையாக தான் செல்ல வேண்டும், படிக்கட்டுகள் கிடையாது. இக்கோயிலுக்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து மலையேறி சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் கோகுல அஷ்டமியை ஒட்டி இன்று (ஆக. 20) சனிக்கிழமை காலை கோபால்சாமி மலையில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமணிந்து நடனமாடி, அங்கு தொங்கவிடப்பட்டிருந்த உரியை அடித்தனர்.
அதன் பின்னர் சுவாமிக்கு அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உறியடி உற்சவத்தை பார்ப்பதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரைச் சேர்ந்த மருதாயி என்ற 105 வயது மூதாட்டி மலையேறி வந்து சாமி தரிசனம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து மூதாட்டி கூறுகையில், “நான் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியன்று இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகிறேன். எனக்கு மலை ஏறுவது பிடிக்கும், அதனால் ஏறி வருகிறேன். வயது ஒரு பொருட்டல்ல தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் மலையேறி விடலாம்” என கூறினார்.
இதையும் படிங்க: வடிந்தது வெள்ளம் - மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!