சென்னை சூளைமேடு சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா (58). இவர் கடந்த 13ஆம் தேதி அதே பகுதியில் உள்ள சார்புதீன் தெருவிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவ்வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் துர்காவின் கழுத்தில் இருந்த 1 சவரன் தாலியைப் பறித்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக துர்கா அளித்த புகாரின் அடிப்படையில் சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் பதுங்கியிருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ராகுல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து தாலி செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். மற்றொரு நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் திருடர்கள் எனக் கருதி, 3 பேரைக் கொலை செய்த மக்கள்!