சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார். இவரது மகன் வீரமணி, புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த காவியா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியது.
இந்நிலையில், காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய வீரமணி, அவரது தந்தை விஜயகுமாரின் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாகக் கூறிய காவியா, இது தொடர்பாக காவல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் அவரது நண்பர்களிடம் தன்னை காதலிப்பதாக அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறினார். மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி தன்னிடம் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறினார்.
இதனிடையே, திடீரென்று அவரது தந்தை தனது வீட்டிற்கு வந்து, உதவி ஆய்வாளருக்கு வீரமணி படித்துவருவதாகவும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் மிரட்டியதாக காவியா குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வீரமணியும் அவரது தந்தை விஜயகுமாரையும் காவல் துறையினர் வரவழைத்துப் பேசினர். அப்போது, வீரமணி திருமணத்திற்காக இரண்டு மாதம் கால அவகாசம் கேட்டனர். பின்னர், வசதியின்மையை சுட்டிக்காட்டியும் வரதட்சணை அதிகமாக கேட்டும் திருமணம் செய்து கொள்ளமுடியாது என வீரமணி கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த காவியா, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட வீரமணியின் தந்தை விஜயகுமாரை தொடர்பு கொண்டபோது, தனது மகன் வீரமணியை, காவியாவுக்கு திருமணம் செய்து வைப்பதில் தான் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் காவியாவின் வீட்டிற்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்ததாகவும் கூறினார். மேலும், காவியாவின் பெற்றோர்கள் சாதியைக் காரணம் காட்டி, தங்களிடம் திருமணம் தொடர்பாக பேசவுமில்லை, வீட்டிற்கு வரவுமில்லை என விஜயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்கள்: திருமண பந்தத்தை தாண்டிய உறவு: ஆட்டோ ஓட்டுநர் கொலை