இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் தேசிய யோகா நேச்சுரோபதி மருத்துவர்களின் மூன்று நாள் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே, தன் உரையை இந்தி மொழியில்தான் வழங்கினார்.
அவரது இந்தி உரை புரியாத, தமிழ்நாட்டைச் சேர்ந்த யோகா மருத்துவர்கள், “பயிற்சி அளிப்பவர்கள் மூன்று நாள்களாக இந்தியியில்தான் பேசுகிறார்கள். அது எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் எங்கள் மாநிலத்தில் பணி செய்யத் தேந்தெடுக்கப்பட்டு இந்தப் பயிற்சிக்காக வந்தவர்கள். பல மாநிலத்தவர் இருக்கிறோம். தாங்கள் ஆங்கிலத்தில் பேசினால் எங்களுக்கு நன்கு புரியுமே?” எனக் கேட்டிருக்கின்றனர்.
உடனே ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கோட்சே, “இந்தியில்தான் பேசமுடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ” என்று அதட்டியிருக்கிறார்.
இது இந்தி பேசாத மருத்துவர்கள், குறிப்பாக தென்னக மருத்துவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மருத்துவர்கள் மீதான “இந்தி”யர்களின் இயல்பான வெறுப்பு மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடு. இது தவிர தமிழர்களுக்கு எதிரான வேறு விதமான வேண்டாத நடவடிக்கைகளும் அந்த ஆயுஷ் அமைச்சகத்தில் அரங்கேறுகின்றன.
ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்த ஒரே ஒரு சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியையும் இப்போது நீக்கியுள்ளனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) சித்த மருந்துக் கட்டுப்பாடு இணை இயக்குநர் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவரை நியமித்திருக்கிறார்கள். தமிழ் சித்த வைத்தியத்தின் மீதான கொடும் வெறுப்பின் காரணமாக இப்படி தகாத முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் ஆயுர்வேத சித்தா யுனானி மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ASUDTAB), மரபார்ந்த 75 தமிழ்ச் சித்த மருத்துவ மூல நூல்களை, அரசு மருந்துச் சட்ட நூலில் இணைக்கப் போராடி வருகிறது. ஆனால் இன்றுவரை அது ஏற்கப்படவில்லை.
இப்படிப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்துக்கு நேராக, தமிழ்நாடு மக்கள் சார்பில் பல கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. இருப்பினும், தற்போது ஒருசில கேள்விகளையே இங்கு முன்வைக்கிறோம்.
இந்த ஆயுஷ் என்பது எந்த மொழி? உயிரோடிருக்கும் எந்த மொழியிலும் இச்சொல் இல்லையே. A ஆயிர்வேதத்தையும், U யுனானியையும், S சித்தாவையும், H ஹோமியோபதியையும் குறிக்கும் என்றாலும், இது என்றைக்குமே இருந்திராத சமஸ்கிருத மொழியை அடியொற்றிய ஒரு சொல் என்றுதான் சொல்கிறார்கள் மொழியியலாளர்கள். அப்படியிருக்க நலவாழ்வு அமைச்சகத்துக்கு ஆயுஷ் என்று மக்களுக்கே புரியாக பெயரை வைப்பதென்ன?
“இந்தியில்தான் பேசமுடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ” என்று சொல்ல இந்த ராஜேஷ் கோட்சே யார்? ஹிந்தி நாட்டவரான இவரல்லவா இந்தியாவை விட்டு எழுந்து போயிருக்க வேண்டும்.
கோட்சே என்றதும் இந்தியாவை மீட்டுத் தந்த தேசத் தந்தை காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சேதான் நினைவுக்கு வருகிறார். இந்த ராஜேஷ் கோட்சே காந்தியார் மீட்டுத் தந்த இந்தியாவையே கொன்றுவிடுவது போல பேசியுள்ளார்.
இந்தியா என்பது மாநிலங்களின் (நாடுகளின்) ஒன்றியம். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு தேசிய இனமாகும். அதற்கான நாடும் தனியாகும். அத்தனை நாடுகளும் இணைந்துதான் இந்திய ஒன்றியம். சுருக்கமாக இந்தியா என்கிறோம்.
எனவே ஆயுஷ் அமைச்சக செயலரை மட்டுமல்ல, ஆயுஷ் அமைச்சகம் என்ற பெயரையும் மாற்ற வேண்டும். அந்த அமைச்சகத்தின் தவறான நடவடிக்கைகளையும் போக்குகளையும் முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும். இது பிரதமரின் முழுமுதற் கடமை.
இந்தியத் துணைக்கண்டத்தில் தன்மான இயக்கம் (சுயமரியாதை இயக்கம்), திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய (ஐன்ஸ்டீனின் பொது சார்பியல்படி) அறிவியல் தளங்களைக் கொண்டது தமிழ்நாடாகும்.
இதெல்லாம் பிற்போக்கு வர்ணாசிரம சனாதன மோடிக்கோ, அவரது பிடியாள் ராஜேஷ் கோட்சேவுக்கோ புரிவதற்கு வாய்ப்பில்லை. உலக நாடுகள் சங்கத்தின் (Leauge of Nations) ‘ஒரு மொழி ஒரு நாடு’ என்ற நியதிப்படி, ஆயுஷ் செயலர் ராஜேஷ் கோட்சே, இந்தி பேசும் ஒரு தனி நாட்டவரே.
அவர் நாடு மாறி, பல்வேறு மொழி இனத் தேசிய ஒன்றியமான இந்தியாவிற்குள் வந்து, இந்தியர்களைப் பார்த்தே, இந்தி தெரியாதவர் வெளியேறுங்கள் என அதட்டுவதா?
இந்தி நாட்டவர் ராஜேஷ் கோட்சேவே! இந்தியாவை விட்டு வெளியேறுகிறீரா அல்லது இந்தியராகிய நாங்களே உம்மை வெளியேற்றவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.