தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19ம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சுதந்திரத்துக்கு முன் இருந்து பின்பற்றப்பட்டு வந்த தபால் வாக்கு நடைமுறையை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும் பின்பற்ற எந்த காரணமும் இல்லை என்றும், தபால் வாக்கு என்பது முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2020ம் ஆண்டு மின்னணு பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு முறை மட்டும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர முடியும் எனவும், இதன் மூலம் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த முடியும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டார். மருத்துவ கவுன்சில் தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து, இந்த வழக்கின் விசாரணையையும் டிசம்பர் 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க : ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்