இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படட்டுள்ளது.
அதன்படி, கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்புக் கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும், ஒருசில நிபந்தனைகளுடனும் தனது அறிக்கையை அளித்தது. அதனடிப்படையில் கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து அரசு ஒப்புதல் அளித்தது.
ஒரு நாளைக்கு அதிகபட்ச தொகுப்புக் கட்டணமாக பொது வார்டில், அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிரச் சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம்:
மருத்துவமனையின் தரம் ஏ1, ஏ2 - 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை
மருத்துவமனையின் தரம் ஏ3, ஏ4 - 9,000 ரூபாய் முதல் 13,500 ரூபாய் வரை
நிபந்தனைகள்:
- அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்தப் படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக்கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
- விவரங்கள் மற்றும் புகாருக்கு - 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சுகாதாரப் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவுசெய்து பயன்பெறத் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நடவடிக்கைகளால், கரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செம்மொழித் தமிழாய்வு: மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு!