கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், "நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மண்டலங்களுக்குள் போக்குவரத்து வசதி தமிழ்நாட்டில் நிறுத்தப்படும். அரசுப் பேருந்துகள் அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே இயக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளைக் கடுமையாக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
தனியார் வாகனங்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல தடை விதிக்க வேண்டும். அரசாங்க வலைதளத்திலிருந்து இ-பாஸ் பெற்ற பின்னரே மற்றொரு மாவட்டத்திற்குள் நுழைய முடியும். அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் ஒரே மண்டலத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்க முடியும்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்கு 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகம் கரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அலுவலர்களின் கீழ் கரோனா கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் அமைச்சர்கள் ஆறு பேரும் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 67 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!