சென்னை: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன், மாநிலப் பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் கடந்த 11 ஆம் தேதி கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு கால் முழங்காலில் Arthroscopy அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மாணவிக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டவுடன் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அறுவை சிகிச்சை (Amputation) செய்யப்பட்டு உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது. மீண்டும் 14 ஆம் தேதி அன்று உடல்நிலை மோசமடைந்து இறந்திருப்பது வருத்தத்திற்குரியது. இளம் பெண்ணின் இத்தகைய துயரமான சம்பவம் நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதுபோன்ற Arthroscopy அறுவை சிகிச்சைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த பெரிய மையங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் சிறப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் Arthroscopy செய்வதற்கு வசதிகள் குறைவாக உள்ள மாவட்ட மற்றும் நகர்புற மருத்துவமனைகளில் எலும்பு முறிவு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவர்களிடம் விளக்கமும் (Memo) பல இடங்களில் துறை உயரதிகாரிகளால் கேட்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிப்பது இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகிறது.
பெரியார் நகர் மருத்துவமனை போன்ற சிறிய மருத்துவமனையில் பணிச்சுமையும் அதிகம் இருக்கும். அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர்கள் எடுத்த நிலையில், பெரியார் நகர் மருத்துவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற தவறை செய்தது போல் பொதுவெளியில் சித்தரிப்பது வருங்காலத்தில் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற உயர்தர அறுவை சிகிச்சை செய்யும் எண்ணத்தை அழித்துவிடும்.