சென்னை: வடபழனியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு மாநகராட்சி துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி துணைத் தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநகராட்சி மேயர் பதவி
கடலூரில் துணை மேயர் பதவிக்கு வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார். அனைத்து இடங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டும். சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் துணை மேயருக்கு எழுதிக் கொடுத்தோம் அதில் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் மாநகராட்சி மேயர் பதவி ஒன்று கேட்டு இருந்தோம், கேட்டது கிடைக்கவில்லை என்றாலும் ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.
அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதை வழி நடத்த வலிமையான ஆளுமை இல்லை. ஐந்தாண்டு காலம் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவை தோளில் சுமந்து வந்தனர். இதனால் அதிமுக மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து விட்டது. சசிகலா அதிமுகவுடன் இணைவது தனிப்பட்ட விருப்பம் அதில் தலையிட முடியாது.
அண்ணாமலை ஒழுங்காகப் படிக்கவில்லை
பாஜக தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அண்ணாமலைக்கு 1, 2 கூட ஒழுங்காகப் படிக்கவில்லை என்று தான் தெரிகிறது. பாஜக மூன்றாவது இடம் என்பது ஒரு மாயை, பல இடங்களில் டெபாசிட் கூட பெறவில்லை. அதனை மூடி மறைப்பதற்காக ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உக்ரைனில் சிக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை உடனடியாக தாயகம் திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்