சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாலைப் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை- பெங்களூரு விரைவுச் சாலைத் திட்டத்துக்கு 10 கட்டங்களாக டெண்டர்கள் விடப்பட்டு, இதில் எட்டு டெண்டர்கள் நிறைவுபெற்றுள்ளன.
15 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 250 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இதன்மூலம் சென்னை- பெங்களூரூ இடையேயான பயண நேரம் 3 மணி நேரமாகக் குறையும். இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 69 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இந்தாண்டு இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை சேலத்திலிருந்து சென்னைக்கு ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அதன்பின்பு நிலம் கையகப்படுத்தும் பணி தொடரும். இதற்காக இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்படும்" எனத் தெரிவித்தார்.
அப்போது, வேளாண் நிலம் பாதிக்கப்படுவது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "குறைந்த தூரத்தில் சாலையை அமைக்க நினைக்கிறோம்.
திட்டத்தைச் செயல்படுத்தும்போது வேளாண் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்காமல் வேறு வழியில் கொண்டுசெல்ல முயற்சி செய்வோம்" என்றார்.
இதையும் படிங்க: 'எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மட்டும் 69% இட ஒதுக்கீடு' - நீதிபதி யோசனை