இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை 1ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும், ஏற்கனவே தேர்ச்சி வழங்கப்பட்டிருக்கிறது. அண்மையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 15ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். சிறிய இல்லங்களுக்குள்ளே அவர்கள் முடங்கியிருக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் உணவுக்கே சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற சூழல்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்று எண்ணி மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை தமிழ்நாடு கண்டிராத இந்த அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தள்ளிவைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வேண்டும்.
தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பதினொன்றாம் வகுப்பில் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து முழுத் தேர்ச்சி வழங்கிட வேண்டும். நிலைமை சீரான பிறகு மதிப்பெண்களை எப்படி வழங்குவது குறித்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மாணவர் நலன் கருதி உடனடியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.
இந்தியாவிலேயே கரோனா பாதிப்பில் தமிழ்நாடு தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே பிற மாநிலங்கள் அறிவித்த பிறகு அறிவிக்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கான நற்செய்தி இது!