சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியைப் பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டின் மாணவர்களை மீட்பதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தொடர்புகளைப் பயன்படுத்தி இன்று (மார்ச் 5) 35 மாணவர்களுக்குப் போர் பகுதியிலிருந்து அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் 17, 500 டாலர்கள் (சுமார் ரூ. 14 லட்சம்) தமிழ்நாடு அரசே செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர்கள் டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்கு இன்று தனி விமானத்தை அமர்த்தி உடனடியாக வரவழைக்கப்பட்டனர் என்றும் உக்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீட்பதற்கான சிறப்புக் குழு இதில், தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி பணியினை விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுவரையில் ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:உக்ரைன் போர்: மனிதநேய செயல்பாடுகளுக்கு 15 மில்லியன் டாலர் அளிக்கும் 'மெட்டா'