நாடகக் கலைஞர்களுக்காக அரசுப் பேருந்தில் சலுகை - தமிழ்நாடு அரசு - நாடகக் கலைகள் தொடர்பான உபகரணங்களை கட்டணம் இல்லாமல் பேருந்தில் ஏற்றி செல்ல அனுமதி
நாடகக் கலைகள் தொடர்பான உபகரணங்களை கட்டணமில்லாமல் அரசுப் பேருந்தில் ஏற்றி செல்ல அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நாடகக் கலைஞர்களுக்கு அரசுப் போக்குவரத்து பேருந்துகளில் 50 விழுக்காடு கட்டண சலுகையை வழங்கிவரும் நிலையில், தற்போது நாடகக் கலைகள் தொடர்பான உபகரணங்களை கட்டணமில்லாமல் பேருந்தில் ஏற்றிச் செல்ல அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது நாடகக் கலைஞர்களுக்கு அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளில் 50 விழுக்காடு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்திய உபகரணங்களை கட்டணமில்லாமல் பேருந்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாடகக் கலைஞர்களுக்கான கலைப் பொருள்கள், இசைக் கருவிகள்:
1) ஆடை அணிகலன்கள்
2 ) ஒப்பனைப் பொருள்கள்
3 ) இசை வாத்தியக் கருவிகள்
4 ) ஆர்மோனியம்
5 ) தபேலா
6 ) டோலக்
7 ) மிருதங்கம்
8) இதர ஏதேனும் சிறிய அளவிலான இசைக் கருவிகள் ஆகிய கருவிகளை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் நலிவுற்ற நாடகக் கலைஞர்கள்-அரவணைக்குமா அரசு?