COVID-19 surge: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 417 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 13 ஆயிரத்து 958 நபர்களுக்கும், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த தலா இரண்டு பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்த 28 நபர்களுக்கும் என 13 ஆயிரத்து 990 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 77 லட்சத்து 19 ஆயிரத்து 579 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
சிகிச்சை
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 62 ஆயிரத்து 767 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 2547 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் எட்டு நோயாளிகள் என 11 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 866 என உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்று
வெளிநாடுகளிலிருந்து வந்த 27 ஆயிரத்து 346 பயணிகளுக்குப் பரிசோதனை செய்ததில் 415 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 268 பயனாளிகளுக்கு எஸ் ஜீன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 185 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் புதிதாக ஆறாயிரத்து 190 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. 30,843 பேர் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். செங்கல்பட்டில் 1,696 பேருக்கு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டதால் 7,480 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
புதிய பாதிப்பு விழுக்காடு
மாநிலத்தில் கரோனா வைரஸ் புதிய பாதிப்பு விழுக்காடு 8.7 என அதிகரித்துள்ளது. சென்னையில் பரவல் வீதம் 17.4, செங்கல்பட்டில் 16.4, ராணிப்பேட்டையில் 14.7, வேலூரில் 10.2, திருநெல்வேலியில் 10.2 விழுக்காடு எனக் கிடுகிடுவென அதிகரித்துவருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துவருவதால் அரசும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு?