சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் புதிய 17 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெளியிட்டார்.
1. மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் மாணவர் தமிழ்மன்றம் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூபாய் 5 லட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.5.36 கோடி வழங்கப்படும்.
2. தமிழ்நாடு முழுவதும் 6218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுதோறும் ரூபாய் 9000 வீதம் ரூ. 5.60 கோடி வழங்கப்படும்
3. தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்ய ரூ.2.11 கோடி வழங்கப்படும்.
4. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ( NACC ) உயர் புள்ளிகளை பெற தமிழ்ப்பல்கலைக்கழக கூட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் சிறப்பு செய்ய ரூ. 2 கோடி வழங்கப்படும்.
5. திருக்குறளுக்கு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெறும் வகையில் பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நடத்தி ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
6. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகத்தை மேம்படுத்திடவும் நூலகத்தை கணினிமயமாக்கி தரம் உயர்த்தவும் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் நூலகத்தை மேம்படுத்திடரூ. 78 லட்சம் வழங்கப்படும்
7. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 61.50 லட்சம் வழங்கப்படும்
8. தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு கணினி மற்றும் அச்சு கருவிகள் வாங்க ரூ. 57 லட்சம் வழங்கப்படும்
9. மருத்துவம் பொறியியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உடன் இணைந்து துறைசார் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய கலைச்சொல் அகராதிகள் உருவாக்கப்படும். இதற்கென ரூபாய் 35 லட்சம் வழங்கப்படும்
10. மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அயல்நாடு வாழ் தமிழர்களின் படைப்புகளுக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தவும், உலக தமிழ் சங்க நூலகத்தை புனரமைப்பு செய்திடவும் ரூபாய் 26 லட்சம் வழங்கப்படும்.
11. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தம் சந்ததியினர் மொழி வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அங்குள்ள நூலகங்களில் தமிழ் நூல்கள் வழங்கப்படும். இதற்கு ரூபாய் 20 லட்சம் ஒதுக்கப்படும்.
12. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழின் மீது ஆர்வத்தையும் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தப்படும். இதற்கென ரூ 16.72 லட்சம் வழங்கப்படும்.
13. அண்ணா பல்கலைகழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையத்தின் பயிலரங்கம் நடத்திடவும், மண்டலம் மற்றும் மாநில அளவில் தமிழில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போட்டிகள் நடத்தவும் ரூ. 16 லட்சம் வழங்கப்படும்.
14. கலை பண்பாட்டு துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும் நாட்டுப்புற பாடல்கள் வடிவிலும் பொது மக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
15. தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக மற்றும் சிறப்பாக செயல்படுத்தும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியன மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும். இதற்காக ரூ. 7 லட்சம் ஒதுக்கப்படும்.
16. தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் மற்றும் அலைபேசி மூலம் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் கலைச் சொற்களை தாமே உள்ளீடு செய்திடும் வகையில் தொகுப்பி என்னும் செயலின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உருவாக்கப்படும். இதற்காக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
17. அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் தமிழில் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும். இதற்காக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.