தமிழ்நாட்டில் பருவத் தேர்வு எழுத கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பருவத் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதலமைச்சரும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தேர்வு எழுதாமல் அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை எடுத்துள்ளனர். ஆனால், ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் கூட செலுத்த இயலாத மாணாக்கர்களின் நலன் குறித்து இந்த அரசு ஆலோசனை நடத்தாதது என்பதும் கண்டனத்திற்குரியவை.
பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன.
கரோனாவால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர்.
மேலும், பேரிடர் நெருக்கடியில் 'தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை' முதலமைச்சர் பழனிசாமி கைகழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஆகவே, 'கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்' என்று முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.