சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சி. ஜெகதீசன், விபத்தில் சிக்கியதால், இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கைத் தாக்கல் செய்ய, மருத்துவ வாரியத்தின் ஊனமுற்ற சான்று பெறும் நடைமுறைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர், 40 விழுக்காடு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சான்றளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஊனச்சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்கக்கோரியும், சான்று வழங்குவதற்குக் காலக்கெடுவை நிர்ணயிக்கக்கோரியும் கடந்த 2018ஆம் ஆண்டு அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஊனச்சான்று பெற வருவோருக்காகத் தனி வார்டை அமைப்பது குறித்துப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊனச்சான்றுகோரி மருத்துவமனைக்கு வருபவர்களுக்காக, 11ஆவது வார்டு பிரிக்கப்பட்டு, அதில் உள்ள நான்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றையும் ஒதுக்க வேண்டுமெனக் கூறி, வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை!