சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு (செப்.19) 8.45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 145 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம், சென்னைக்கு நள்ளிரவு 11.50 மணிக்கு வந்து சேர்ந்தது.
இந்த நிலையில், இவ்விமானம் டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஓடு பாதையில் ஓடத் தொடங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர் ஒருவர் விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விமான பணிப்பெண்கள் ராணுவ வீரர் மணிகண்டனிடம், “இது விமானத்தின் அவசரகால கதவு. இதை நீங்கள் திறக்கக் கூடாது” என்று எச்சரித்து கண்டித்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு (செப்.19) 11.50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ராணுவ வீரர் மணிகண்டனிடம், டெல்லியில் விமானம் புறப்படும்போது விமானத்தில் இருந்த அவசர கால கதவைத் திறக்க முயன்றதாக அவர் மீது புகார் வந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, ராணுவ வீரர் மணிகண்டனை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அது அவசர கால கதவு என்பது தெரியாமல் திறக்க முயற்சித்ததாக மணிகண்டன் கூறியுள்ளார்.
இருப்பினும், விமான பாதுகாப்புச் சட்டப்படி, அவசரகால கதவைத் திறக்க முயன்றது குற்றம் என்பதால், மணிகண்டனை மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து, அவர்கள் மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “முழுமையாக விசாரணை நடத்தி, எச்சரித்து எழுதி வாங்கிய பின், ராணுவ வீரர் மணிகண்டன் விடுவிக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் நியமனம் செய்த துணைவேந்தர் தேடுதல் குழு மாற்றியமைப்பு - அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசு!