சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவர்கள் பெற்றுவருகின்றனர். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மருத்துவத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் இதுவரை 16ஆயிரத்து 866 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 ஆயிரத்து 659 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுவதும் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
மற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் போதுமானது. இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விண்ணப்பிக்கும் போது எந்தெந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களில் ஏதாவது தவறு இருந்தால் அதை சரி செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். 2021 - 22 ஆம் ஆண்டில் 40 ஆயிரத்து 853 மாணவர்களும், 2020 - 21 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 971 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 50-50 இடங்களும் கேகே நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 125 இடங்களும் உள்ளன. மேலும், பல் மருத்துவ படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 200 இடங்களும் உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: First On - பொறியியல் சேர்க்கை முதல் சுற்றுக்கலந்தாய்வு - 269 கல்லூரியில் ஒரு மாணவரும் சேராத அவலம்!