தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஹரிணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். பணி நிமித்தமாக தனது மகளை சாலிகிராமத்திலுள்ள தனது தங்கையின் வீட்டில் தங்க வைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக தனது சித்தியின் வீட்டில் வளர்ந்த 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனதால் சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமி தனது சித்தியின் வீட்டில் இருந்தபோது சித்தியின் கணவர், சித்தி, அவர்களது உறவினர் ஒருவர் சேர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சிறுமியின் சித்தி கீழ்ப்பாக்கத்திலுள்ள தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று மதபோதகருடன் சேர்ந்து பாடல் பாடி வந்துள்ளார். அதனால், சிறுமியும் தேவாலயத்திற்குச் சென்று வந்தபோது மதபோதகரும் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்சியடைந்த தாயார், உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிறுமியின் சித்தி, சித்தப்பா, அவர்களது உறவினர், மதபோதகர் ஆகியோர்களின் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையறிந்த குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மூவர் போக்சோவில் கைது!