கால முறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், அக்டோபர் 25ம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவக் கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதில், "தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்கள், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், ஏழை மக்கள் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படக் கூடாது" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.