தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
பெரும் தொழில் நிறுவனங்கள், முக்கியப் பிரமுகர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன், பல்கலைக்கழக துணைத் தலைவர் மரிய பெர்ணடெட் தமிழரசி ஜான்சன் ஆகியோர் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 லட்சத்துக்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். நிவாரண நிதி வழங்கிய சத்யபாமா நிகர் நிலை பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'இந்தியப் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டும் விண்குப்பை நிர்வாகமும்'