சென்னை: ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையொட்டி பின், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்தும் நீக்கியதுடன், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால்,வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை எதிர்த்து அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை சசிகலாவின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும்; வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்றக் கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சசிகலா வழக்கை மீண்டும் பட்டியலிட்டு விசாரணை நடத்த வேண்டுமென முன்பு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜாகோபாலன் ஆஜராகி ஆகியோர் முறையிட்டதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு வழங்கியதில் சர்ச்சை