நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 144 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆயிரம் விளக்கு தொகுதியின் அண்ணாசாலை பகுதியிலும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அண்ணசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகில், தேர்தல் பறக்கும் படையினர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தனியார் பாதுகாப்பு வாகனத்தில் வந்த பொறுப்பாளரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், தி.நகரில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு அந்த கட்டிகளைக் கொண்டு செல்வதாகவும், அதற்கான உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறினார். ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
வாகனத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளின் மதிப்பு ரூபாய் 6 கோடி என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. ஆவணங்களை ஆய்வுசெய்த பிறகு மீண்டும் தங்கம், வெள்ளி கட்டிகளை தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடமே ஒப்படைத்தனர்.
வாகனத்தில் கொண்டு வந்த தங்கம், வெள்ளி கட்டிகளையும், ஆவணங்களையும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் முழுமையாக வீடியோ பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு