நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் மன்றமாக நிர்வகித்துவருகிறார். இதன் பொறுப்பாளராக புஸ்ஸி ஆனந்து என்பவர் நியமிக்கப்பட்டு இளைஞரணி, தொண்டர்கள் அணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து கவனித்துவருகிறார்.
இம்மன்றத்தின் அகில இந்தியச் செயலாளராக ரவிராஜா, துணைச் செயலாளராக குமார் ஆகியோர் இருந்தனர். ரவி ராஜா பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்தில் பொறுப்பில் இருப்பவர். அண்மையில் ரவிராஜா, குமார் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பொறுப்பாளர் ஆனந்து உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்து இருவரும் செயல்பட்டதே அவர்களது நீக்கத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் எஸ்.ஏ. சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியைப் பதிவுசெய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததோடு தனது ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் சேர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இச்சூழலில் விஜய் மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... 'வலிமை'யில் நடிக்கவில்லை - 'குக்வித் கோமாளி' புகழ் தகவல்