சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (30). லாரி ஓட்டுநரான இவரது வீட்டின் அருகே உஷா என்பவர் வசித்து வருகிறார்.
உஷாவின் சகோதரர் விஸ்வநாதன் (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், தனது நண்பர் கலைஞன் (21) என்பவருடன் சகோதரி வீட்டிற்கு ஜனவரி 30ஆம் தேதி நள்ளிரவு வந்தார். அப்போது ஓட்டுநர் மணிகண்டன், புதுப்பேட்டை படம் பாணியில் இருவரையும் பார்த்து 'எங்க ஏரியா உள்ள வராதே' என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் இடது காதில் பலமாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து சென்ற சங்கர் நகர் காவல் துறையினர், படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல் துறையினர், குற்றவாளி விஸ்வநாதன், அவரது நண்பர் கலைஞன் ஆகியோரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழப்பு - பொதுமக்கள் மறியல்!