சென்னை: தமிழ்நாடு காவல் துறை சைபர் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியான அம்ரிஷ் புஜாரிக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சைபர் பிரிவு டிஜிபியாகவே பணியை தொடருவார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் தாம்பரம் காவல் ஆணையராக உள்ள கூடுதல் டிஜிபியான ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராகவே அவர் பணியை தொடரவுள்ளார். தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியான ஜெயந்த் முரளி டிஜிபி பதவி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக அவர் பணியை தொடர்வார். இந்த பதவிக்கான அந்தஸ்தும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் கருணாசாகர் ஒன்றிய அரசு பணியான காவல் துறை ஆராய்ச்சி, மேம்படுத்துதல் பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஒன்றிய அரசு பணியை அவர் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1991ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்த இந்த நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதால் தமிழ்நாடு காவல் துறையில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதுகாப்பு கேட்டு கர்நாடக அமைச்சரை சந்தித்த சேகர் பாபு மகள்!