சென்னை: பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசின் அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள், தங்கள் பெயரும் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் புகார் அளிக்க தயங்குகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
அரசாணையில் பெயர்களை இடம்பெற செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்." என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு முன் இன்று (பிப்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், "பெண்களின் பெயர்களை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், "ஏற்கனவே இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதை அறியாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதால், தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கை தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்படுகிறது." என குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!