தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களின் சம்பளச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு இன்சூரன்ஸ், கடன்கள் வழங்குவதாக கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த புகார்கள் வந்ததன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் உதவி ஆணையர் டாக்டர். செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ப்ரீதி என்பவருக்குச் சொந்தமான சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 'பிரான்ஸ் சென்டர்', என்ற பெயரில் இயங்கிவந்த கால் சென்டர், அதேபோல் சித்தலபாக்கம் பகுதியில் முனீர் ஹுசைன் என்வருக்குச் சொந்தமான மற்றொரு போலி கால் சென்டர் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.


சோதனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனங்களின் உள்பணி (back office) பணியாளர்கள் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சதிஷ்குமார், கொளத்தூரைச் சேர்ந்த பிரசன்னா, விருகம்பாக்கம் ப்ரீதி, மேலும் இதேபோல் போலி கால் சென்டர் நடத்தி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்துவந்த தாழம்புரைச் சேர்ந்த கல்பனா உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தொடர்ந்து இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி வந்த ஜாவேத் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு வழக்கு குறித்து கூறிய காவல்துறையினர், பொதுமக்கள் அரசு, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆஃபர்கள் என்ற பெயரில் இப்படி வலை விரிக்கும் போலி நிறுவனங்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.