சென்னை மாநகர பேருந்தில் கோடம்பாக்கம் லிபர்ட்டி அருகே பயணித்த நபர் ஒருவர் கத்தியுடன் இருக்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் வீடியோவில் பதிவான முக அடையாளங்களை வைத்து கோடம்பாக்கம் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு, எம்ஜிஆர் நகர் தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(20) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வரும் நாட்களில் பேருந்திலோ, ரயிலிலோ கொண்டாட்டம் என்ற பெயரில் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வழித்தடத்தில் முக்கியமான பேருந்து நிறுத்தம் மற்றும் பிற இடங்களில் காவல் துறையினர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது