பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில், “ஆந்திராவிலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் பெய்து வரும் மழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலைவனமாக காட்சியளித்த ஆற்றில் இப்போது பால் போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, “பாலாற்று தண்ணீரைக் கொண்டு அதையொட்டியுள்ள ஏராளமான ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. பாலாற்றில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. நிரம்பிய தடுப்பணைகள் சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் கூடுதல் நீர் பயன்பாடின்றி கடலில் வீணாக கலக்கிறது” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
மேலும், “வினாடிக்கு 2600 கன அடி கடலில் கலக்கிறது. அதாவது 4 நாள்களுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் வீணாகிறது. ஒரு டிஎம்சி நீரைக் கொண்டு பல ஏரிகளை நிரப்பலாம். 12 டிஎம்சி நீரைக் கொண்டு சென்னைக்கு ஓராண்டுக்கு குடிநீர் வழங்க முடியும். ஆனால், இந்த நீர் வீணாவது வருத்தமளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, “பாலாற்றில் 5 கி.மீ.,க்கு ஓர் தடுப்பணை கட்ட வேண்டும் எனச் சட்டப்பேரவையிலும், வெளியிலும் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
பாலாற்றில் அறிவிக்கப்பட்ட 4 தடுப்பணைகள் இன்னும் கட்டப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் 5 கி.மீ.,க்கு ஒன்று வீதம் தடுப்பணைகளை கட்ட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன - ராஜகண்ணப்பன்