பல்லாவரத்தில் பிரியாணி கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை பல்லாவரம் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
பல்லாவரம், தண்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் (48), அதே பகுதியில் சொந்தமாக பிரியாணி கடை நடத்திவருகிறார். நேற்று இரவு (டிச. 08) வியாபாரத்தை முடித்துவிட்டு, தனது கடையில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் அடங்கிய கும்பல் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில், இஸ்மாயில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளது.
இதனால் பதறிய இஸ்மாயிலும், அவரது நண்பர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். செய்வதறியாது திகைத்து நின்ற இஸ்மாயிலை, சுற்றி வளைத்த அக்கும்பல், தாங்கள் கொண்டுவந்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய இஸ்மாயிலை மீட்ட பொதுமக்கள், உடனடி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இது குறித்து பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் பம்மலைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
முழுமையான விசாரணைக்குப் பின்னரே கொலை முயற்சிக்கான உண்மையான காரணம் என்னவென தெரியவரும் என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடியவர்களைக் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.