முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் பரோல் குறித்து சிறைத்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 18) மீண்டும் அந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சிறைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பேரறிவாளனின் பரோல் மனு கடந்த ஜூலை 27ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது. மேலும் சிறை தண்டனை நிறுத்திவைப்பு விதிகளில் 'பரோல்' என்ற வார்த்தையே இல்லை என்றும்; 'விடுப்பு' மட்டுமே வழங்க சிறை விதிகள் வகை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே பேரறிவாளன் விடுப்பு பெற்றிருந்ததால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு விடுப்பு வழங்க முடியும் என்றும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளனுக்கு கடந்த முறை விடுப்பு வழங்கியது தொடர்பான உத்தரவுகளை தாக்கல் செய்ய சிறைத்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:முறப்பநாடு அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் உயிரிழப்பு!