சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு யார் காரணம் என்ற தகவலை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். போடி தொகுதியில் ஜானகி கட்சியில் தலைமை ஏஜண்டாக ஓபிஎஸ் இருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறான செய்தி. பொய்யான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஜானகி ஒன்றும் தீண்ட தகாதவர் இல்லை. இரட்டை இலைக்காக தியாகம் செய்தவர் ஜானகி. எடப்பாடி பழனிசாமியின் சமீப கால பேச்சு கட்சியை ஒற்றுமைப்படுத்துவதாக எனக்கு தெரியவில்லை.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமை ஓபிஎஸ்க்கு இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறும் அளவிற்கு தான் எடப்பாடிக்கு தகவல் தெரியும். யாரோ ஒருவரின் பிடியில் கட்சி செல்ல கூடாது என கூறிதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார்.
தற்போது கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காக மட்டுமே ஓபிஎஸ் அனைவரையும் அரவணைத்து வருகிறார். ஒரு குடும்பத்திற்குள் கட்சி சென்று விட கூடாது என அன்று சொன்னோம். அதேபோல இப்போதும் கட்சி, 5 பணக்காரர்கள் கையில் அதிமுக போய்விடக் கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிறோம். காவல்துறை முழுமையான சிசிடிவி காட்சியை வெளியிட்டால் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும்.
சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது பலமாக இருக்கும் என ஓபிஎஸ் நம்புகிறார். எப்போது சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஓபிஎஸ் தான் முடிவு செய்வார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையைத்திறக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு