சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 31) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஒரு நபர் ஆணையம் கடந்த ஜூலை 28ஆம் தேதி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து உள்ளதாகவும், அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக, கடந்த மே 6ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் வேங்கை வயலுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆடியோ சோதனை மற்றும் மனிதக் கழிவைக் கொண்டு நடத்தப்படும் மரபணு சோதனை முடிவுகளை வழக்கமான வரிசைப்படிதான் மேற்கொள்ள முடியும் என்றும், எதையும் அவசரப்படுத்த முடியாது என்றும் கூறினார். சிபிசிஐடி விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், சிபிஐ விசாரணை தேவையா? என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வேங்கை வயல் விவகாரம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு 4 சிறுவர்களின் பெற்றோரும் சம்மதம்!