சென்னை: சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைத்திருமணங்கள் செய்து வைத்ததாக வந்தப்புகாரின் அடிப்படையில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் 2 வழக்குகளும், சிதம்பரம் நகர காவல் நிலையத்தினர் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் திருமணம் செய்து வைத்த தீட்சிதர்களைப் போலீசார் கைது செய்ததைக்கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட, பிற தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல்துறையினர் ஒரு வழக்கும் பதிவுசெய்துள்ளனர்.
இந்த 4 வழக்குகளிலும் தொடர்புடைய கண்ணன் உள்ளிட்ட 52 தீட்சிதர்கள் முன்ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 1ஆம் தேதி வரை இவர்களை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, கைது செய்ய விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவடைவதால், அதை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது காவல் துறை தரப்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற 2 வார காலம் அவகாசம் வேண்டும் எனத்தெரிவிக்கபட்டது.
இதையடுத்து மனுதாரர்கள் 52 பேரையும் கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை, நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை, இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் – யுனிசெப் அறிவுரை