காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத் தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பரிசுப் பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின்கட்காரி நேற்று (ஜூலை 31) அறிமுகம் செய்துவைத்தார்.
ஒரு பரிசுப் பெட்டியில் பல்வேறு வண்ணங்கள், அச்சுக்களுடன் கூடிய கைவேலைப்பாடு கொண்ட நான்கு பட்டு முகக்கவசங்கள் இருக்கும். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேசமயம், விழாக்கால உணர்வைக் கொண்டாடும் வகையிலான தகுந்த ஒரு பொருளாக இந்தப் பரிசுப்பெட்டி உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பாராட்டினார்.
காதி கிராமத் தொழில் ஆணையம் மேற்கொண்ட முகக்கவசத் தயாரிப்பு முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்த அவர், கரோனா பெருந்தொற்று நிலவும் கடினமான காலத்தில், கலைஞர்களுக்கு தொடர்ந்து வாழ்வாதாரம் கிடைக்க இது வழிவகை செய்கிறது என்றும் கூறினார்.
பட்டு முகக்கவசங்கள் கொண்ட இந்தப் பரிசுப்பெட்டியின் விலை 500 ரூபாய். டெல்லி என்.சி.ஆர். பகுதியில் உள்ள காதி கிராமத் தொழில் ஆணையத்தின் அனைத்துக் கடைகளிலும் இந்தப் பரிசுப் பெட்டிகள் கிடைக்கும்.
மூன்று அடுக்குகள் கொண்ட இந்தப் பட்டு முகக்கவசங்கள், தோலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், துவைக்கக் கூடியதாகவும், மறுபயன்பாடு கொண்டதாகவும், தானாகவே மக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
இந்த முகக்கவசங்களில் 100 விழுக்காடு காதி பருத்தி துணி கொண்ட இரண்டு உள்அடுக்குகளும், பட்டுத்துணியால் அழகுற செய்யப்பட்டுள்ள மேலடுக்கு ஒன்றும் இருக்கும்.