பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழ் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தனது நற்பெயருக்கு, குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த 15 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில் நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட நக்கீரன் கோபால் மீதான வழக்கு உட்பட 5 புகார்கள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நக்கீரன் மீதான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.