சென்னை: எருக்கஞ்சேரியை சேர்ந்த தயாநிதி என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், தயாநிதி வீட்டுக்கு வந்த ஜெயந்தி என்பவர், 1,800 சதுர அடி பரப்பு வீட்டை தயாநிதி தனக்கு விற்பனை செய்து விட்டதால், உடனடியாக காலி செய்யும்படி, தயாநிதியின் மனைவி சித்ரா மற்றும் வாடகைதாரர்களை மிரட்டியுள்ளார்.
கணவர் மரணத்தால் அதிர்ச்சியில் இருந்த சித்ரா, ஒரு மாதத்துக்குப் பின் போலீஸில் புகார் அளித்தார். இதற்கிடையில், ஜெயந்தி அளித்த புகாரின் அடிப்படையில், சித்ராவையும் அவரது மைனர் மகன் பரத்குமாரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கொடுங்கையூர் ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர் கல்வியரசன் ஆகியோர் அங்கு வைத்து இயற்கை உபாதைகளை கழிக்க விடாமலும், பரத்குமாரை கல்லூரி செல்ல விடாமலும் தடுத்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப இரு நீதிபதிகள் மறுத்ததை அடுத்து, இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களை குறிப்பிட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சித்ரா அளித்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், ஜெயந்திக்கு ஆதரவாக செயல்பட்டு, சிவில் தன்மையுடைய விவகாரத்தில் தலையிட்டதுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு தலா இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகை 5 லட்ச ரூபாயை ஒரு மாதத்தில் சித்ராவுக்கு இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கழுத்தை நெரித்துள்ளீர்கள்' - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!