திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில், "கோவிட்-19 கொடிய நோய்த்தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 19ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது பின்பற்றி, தமிழ்நாடு மக்களை கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்குத்தான் தெரியும் என முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு உள்ளது.
முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர், ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும். வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களால், தமிழ்நாட்டில் கரோனா பரவியது, அதிமுக அரசுதான் கரோனாவை தோற்றுவித்ததுபோல தினமும் அறிக்கைவிடுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அறிக்கைகளால் மக்களைக் குழப்புவது, அவதூறாகக் கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.