விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்படுவதாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அவர், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான வெளிப்படையான காரணங்களை அதிமுக வெளியிடாத நிலையில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அவர் கருத்துகளைப் பதிவிட்டதற்காக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிவிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தற்போது மீண்டும் அதிமுகவின் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் நியமனம் செய்யப்படும்வரை, கழகப் பணிகளை கவனிப்பதற்கு பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.